×

காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரூ2 லட்சம் பேசி கூலிப்படை ஏவி மனைவியை கொன்றேன்: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த அருணாசலம் மகன் ராஜ்குமார்(33). இவ ரது மனைவி பிரவீனா(24). ெபரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சர்வேஸ்வரன்(5), யோகித்(3) என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரவீனாவின் அத்தை மகன்தான் ராஜ்குமார். ராஜ்குமார் ஐடிஐ முடித்து விட்டு, பெரம்பலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 22ம் தேதி இரவு ராஜ்குமார், மனைவி பிரவீனாவை உறவினர் வீட்டில் விடுவதற்காக பைக்கில் அழைத்து சென்றார். எளம்பலூரில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை நோக்கிச் செல்லும் போது மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து கணவன், மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டினர்.

இதில் பிரவீனா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜ்குமார் கையில் லேசான காயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பெரம்பலூர் போலீசார் சந்தேகமடைந்து ராஜ்குமாரிடம் துருவித்துருவி விசாரித்தனர். இதில் ராஜ்குமாருக்கும், திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த 23 வயதான பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதும், இதன்காரணமாகவே கூலிப்படை ஏவி பிரவீனாவை, ராஜ்குமாரே கொலை செய்ததும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் ராஜ்குமார் அளித்த வாக்குமூலம்: எனக்கும், திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. நான் அவரை அழைத்துக்கொண்டு ஏற்கனவே சென்னை மற்றும் ஈரோட்டுக்கு சென்று குடும்பம் நடத்தினேன். உறவினர்கள் அழைத்து வந்து மனைவியுடன் சேர்த்து வைத்தனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மனைவி பிரவீனாவுக்கும், எனது அண்ணன் செந்தில்குமார் மனைவி ஆனந்திக்கும் ஒரு முறை பிரச்னை ஏற்பட்டது. அப்போது அண்ணியை, எனது மனைவி துடைப்பத்தால் தாக்கி விட்டார். மேலும் என்னையும் அடித்தார். இதனால் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்தேன். இதற்கு ஆனந்தியின் உறவினரான திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாசுகி தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் தீபக்(19) என்பவரை தொடர்பு கொண்டோம். அவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். பிரவீனாவை கொலை செய்ய ரூ.2 லட்சம் பேசப்பட்டது. முன்பணமாக ரூ.50,000ஐ ஆனந்தியிடம் கொடுத்தேன். அவர் கூகுள்பே மூலம் தீபக்குக்கு அனுப்பினார். திட்டமிட்டபடி சம்பவத்தன்று நான் மனைவியை பைக்கில் அழைத்து சென்றேன்.

அப்போது காரில் தயாராக இருந்த தீபக் உள்ளிட்ட 5 கூலிப்படையினர் என்னை கையில் லேசாக வெட்டி விட்டு, எனது மனைவியை சரமாரி வெட்டினர். இதில் மனைவி பிரவீனா இறந்தார். பின்னர் எனது மனைவி கழுத்தில் இருந்த தங்க செயின், கொலுசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கூலிப்படையினர் காரில் தப்பி விட்டனர். கொள்ளையர்கள் பிரவீனாவை கொலை செய்து விட்டதாக நாடகமாடினேன். இதனிடைேய எனது காதலி, எனது செல்போன் நம்பரை பிளாக் செய்து வைத்திருந்தார். இதனால் என்னுடன் வேலைபார்க்கும் ஒருவரின் செல்போனை வாங்கி, அதில் இருந்து எனது மனைவியை கொலை செய்யப்போகிறேன் என எனது காதலி செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி இருந்தேன். அந்த எஸ்எம்எஸ்சை அவர் பார்க்கவே இல்லை. போலீசார் சந்தேகமடைந்து எனது காதலியை அழைத்து விசாரித்தனர்.

அப்போது அவரது செல்போனை வாங்கி பார்த்த போது, நான் அனுப்பிய மெசேஜ் இருந்தது. இதை வைத்து போலீசார் நான் கூலிப்படை ஏவி பிரவீனாவை கொன்றதை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கூலிப்படையினரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஆனந்தி, தீபக் மற்றும் கூலிப்படையினர் ஆம்பூரை சேர்ந்த ஜெகன் மகன் சந்தோஷ் பாபு (எ) சஞ்சய்(19), சுரேஷ் குமரேசன் மகன் சரண்குமார் (எ) சரண்(19), மூர்த்தி மகன் லட்சன் (எ) லக்கி (21), அல்லாஹ் பக்ஸ் மகன் பப்லு(22) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார், ஆனந்தி உள்ளிட்ட 7 பேரையும் நேற்று பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் கத்தி, பிரவீனா அணிந்திருந்த இரண்டரை பவுன் செயின், கொலுசு, செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

The post காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரூ2 லட்சம் பேசி கூலிப்படை ஏவி மனைவியை கொன்றேன்: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Arunachalam ,Rajkumar ,Elambalur ,Praveena ,Ebarambalur ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...